தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்ற துணை போன, ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை அடுத்து ஸ்மித் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவுஸ்திரேலிய அரசின் அமைப்பான அவுஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் வலியுறுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தை முன்னே அறிந்து வைத்திருந்த யாராக இருந்தாலும், தலைமைக்குழு உறுப்பினர்கள் அல்லது பயிற்சி ஊழியர்களாக இருந்தாலும், ஸ்மித்துடன் சேர்ந்து அவர்களும் பதவி விலக வேண்டும் என்று விளையாட்டு ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அணித் தலைவர் ஸ்மித் மற்றும் துணைத் தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சமநிலையிலுள்ளது. மூன்றாவது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றுவருகிறது.
இதன் மூன்றாவது நாள் ஆட்டத்தில், தென்னாபிரிக்க அணி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தது.
உணவு இடைவேளைக்குப்பின், அவுஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் மஞ்சள் நிறத்திலான ஒரு பொருளை பந்தின் மீது தேய்த்தார்.
இது தொலைக்காட்சி காணொளியில் பதிவானதை உணர்ந்த பான்கிராப்ட் அப் பொருளை காற்சட்டையின் முன் பகுதியில் மறைத்துக்கொண்டார். நடுவர்கள் கேட்டபோதும், கறுப்பு நிற பொருளை மட்டும் காட்டினார். இருப்பினும், பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியமை உறுதியானது. இச் சம்பவத்தில், அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் உடனிருந்தார்.
போட்டிக்குப்பின், பத்திரிகையாளர்களை சந்தித்த பான்கிராப்ட் கூறுகையில், ‘‘உணவு இடைவேளையின்போது, பந்தின் தன்மையை எப்படி மாற்றுவது என்பது குறித்து திட்டமிட்டோம். இதனால், வாய்ப்பு கிடைத்த நேரத்தில் மஞ்சள் நிற ‘டேப்பை’ கொண்டு பந்தின் மீது தேய்த்தேன். ஆனால், நூற்றுக்கணக்கான ‘கமராக்கள்’ இருப்பதை மறந்துவிட்டேன். இது தெரிந்தவுடன் பதற்றமாகி விட்டது. எனது செயலை எண்ணி வருந்துகிறேன்,’’ என்றார்.
அணித் தலைவர் ஸ்மித் கூறுகையில்,‘‘ எங்கள் அணி வீரர்கள் ஏற்கனவே பந்தின் தன்மையை மாற்ற முடிவு செய்திருந்தனர். இது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது.
இச் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது என உறுதியளிக்கிறேன். அதே நேரம், தலைவர் பதவியிலிருந்து விலக மாட்டேன். அணியை வழிநடத்தும் சரியான நபர் நான்தான் என நம்புகிறேன்,’’ என்றார்.
இந்நிலையில் இப் பிரச்சினை பெரியளவில் வெடித்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதை அணித் தலைவர் ஸ்மித் ஏற்றுக் கொண்டார்.
இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவுஸ்திரேலிய அரசு ஸ்மித்தை தலைவர் பதவியிலிருந்து நீக்க பரிந்துரை செய்தது.
இந்நிலையில் அணித் தலைவர் ஸ்மித், துணைத் தலைவர் வோர்னர் ஆகியோர் பதவியிலிருந்து விலக ஒப்புக் கொண்டனர்.
இதனால் கிரிக்கெட் சபை அவர்களை உடனடியாக நீக்கியது. ஸ்மித்துக்குப் பதிலாக விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்மித்தின் இச் செயலுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல், முன்னாள் வீரர் கிளார்க் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐ.சி.சி.யின் தண்டனை
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி., ஸ்மித்துக்கு போட்டி ஊதியம் முழுவதையும் அபராதம் விதித்துடன், ஒரு போட்டியில் விளையாடத்த தடையும் விதித்துள்ளது. அதேபோல், பந்தைச் சேதப்படுத்திய கேமரூன் பான்கிராப்டுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 75 சதவிகிதம் அபராதமும், 3 டிமெரிட் புள்ளிகளையும் ஐ.சி.சி. வழங்கியுள்ளது.