ரெக்ஸ் தில்லர்ஸனின் பதவி நிலைக்கு சி.ஐ.ஏ. புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மைக் பொம்பியோவை அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகைக்கு வெளியேயிருந்து உரையாற்றுகையில், ரெக்ஸ் தில்லர்ஸனுக்கும் தனக்குமிடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாகவே அவரை பணி நீக்கம் செய்ய நேர்ந்ததாகத் தெரிவித்தார்.
தாம் இருவரும் நல்லமுறையில் இணைந்து செயற்பட்டபோதும் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பில் தம்மிடையே பெரும் முரண்பாடுகள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
"ஈரானிய உடன்படிக்கையை நோக்கும் போது அது மிகவும் மோசமானது என நான் கருதுகிறேன். ஆனால் அவரோ அது சரியானது என நினைக்கிறார்" எனத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், ஆனால் மைக் பொம்பியோவிற்கும் தனக்குமிடையே சிந்தனையில் ஒருமைப்பாடு நிலவுவதாகக் கூறினார்.
டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அவரால் நியமிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் நீண்ட பட்டியலில் புதிதாக இணைந்து கொண்டவராக ரெக்ஸ் தில்லர்ஸன் விளங்குகிறார்.
ரெக்ஸ் தில்லர்ஸன் பொது விவகாரங்களின் ஒரு தொகை இணக்கப்பாடின்மையை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததாகவும் அது முடிவற்ற விதத்தில் தொடர்ந்ததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெக்ஸ் தில்லர்ஸனுக்கு பதவி விலக அனுமதியளிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை உத்தியோகத்தர்கள் தலைவர் ஜோன் கெல்லி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்ததாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
இதன்போது தான் ஆபிரிக்க சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பும் வரை தான் பதவியிலிருந்து விலக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை மேற்கொள்ள வேண்டாம் என ரெக்ஸ் தில்லர்ஸன் கேட்டுக்கொண்டதாக அந்த மாளிகை தெரிவிக்கிறது.
ஆனால் கீழ் நிலைச் செயலாளர் ஸ்டீவ் கோல்ட்ஸ்ரெயினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனாதிபதியின் டுவிட்டர் செய்தியின் மூலமே ரெக்ஸ் தில்லர்ஸன் தனது பதவி விலகல் குறித்து அறிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறியப்படாத காரணங்களுக்காக ரெக்ஸ் தில்லர்ஸன் ஜனாதிபதியுடன் பேசவில்லை என தெரிவித்த ஸ்டீவ் கோல்ட்ஸ்ரெயன், தானும் பதவி விலகியுள்ளதாக கூறினார்.
தன்னைப் பதவி விலக்குவது குறித்து டுவிட்டர் செய்தியை வெளியிட்டு சுமார் 3 மணி நேரத்தில் டொனால்ட் ட்ரம்பிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்றைப் பெற்றதாக தில்லர்ஸன் கூறினார்.
அவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் உரையாற்றுகையில், தான் சீனாவுடன் நல்ல உறவுகளைப் பேணவும் வடகொரியாவின் அணு ஆயுத நிகழ்ச்சித் திட்டத்திற்கு கடிவாளமிடவும் சிறப்பாக பணியாற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.
எக்ஸொன்மோபைல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரெக்ஸ் தில்லர்ஸன் கடந்த வருடம் இராஜாங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதற்கொண்டு ஒரு தொகை விவகாரங்களில் வெள்ளை மாளிகையுடன் முரண்பாட்டைக் கொண்டிருந்தார்.
அதேசமயம் ரஷ்ய அரசாங்கத்தின் பிரச்சினைக்குரிய நடத்தை மற்றும் செயற்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய பெருமளவு பணி தொடர்ந்தும் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். தான் தனது பணிநீக்கம் குறித்து தெளிவுபடுத்த எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியைக் கோரவுள்ளதாக அவர் தெரிவித்தார்