இதன்படி இன்னும் ஒரு சில தினங்களில்15 மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்படும்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைப்பெற்றது. இந்த புதிய முறைமையின் பிரகாரம் 60 வீதம் தொகுதிவாரியாகவும் 40 வீதம் விகிதாசாரம் மூலமாகவும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் இந்தத் தேர்தலில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவமும் அமுலுக்கு வந்தது. இதன்காரணமாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8325 ஆக அதிகரித்தது. அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால் உள்ளூராட்சிமன்றங்களில் போதிய இடவசதிகளும் குறைவாகவே காணப்படுகின்றது.
குறிப்பாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனால் ஆரம்ப கூட்டத்தொடரை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெண் பிரதிநிதித்துவங்களை உறுதிபடுத்துவதிலும் பெரும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிலையிலேயே பத்து மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் நேற்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இதன்பிரகாரம் அம்பாந்தோட்டை, மாத்தறை, கிளிநொச்சி,புத்தளம்,மொனராகலை, அநுராதபுரம், களுத்துறை,இரத்தினபுரி, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலே நேற்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
எனினும் கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, யாழ்ப்பாணம், கம்பஹா,பதுளை,அம்பாறை,மட்டகளப்பு,திருகோணமலை,முல்லைதீவு,மன்னார்,குருநாகல் ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பெயர் பட்டியல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும்.