முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக் ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள், குறித்த தண்டனையில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள பிணை மனுக்கள் மீதான விசாரணை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்த பிணைமனுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இன்று மீள வும் அவற்றை விசாரணைக்கு எடுக்க தீர்மானித்து உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் நீதியரசர்களான புவனேக அளுவிஹார, பிரியந்த ஜயவர்தன, நளின் பெரேரா மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையிலேயே இந்த மனுக்களை விசாரணைக்கு எடுக்கப்பட்டு இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மேன் முறையீடு செய்துள்ள குற்றவாளிகளில் ஒருவரான துமிந்த சில்வா சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா,மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை என குறிப்பிட்டார்.
அதனால் தனது சேவை பெறுநருக்கு அளிக்கப்பட்ட தண்டனை அசாதாரணமானது என அவர் குறிப்பிட்டார். மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மைக்கு அமைய சாட்சிகள் முரண்பாட்டுக்கு மத்தியில் தனது சேவை பெறுநருக்கு வழங்கப்பட்ட தண்டனை சட்டத்துக்கு முரணானது என அவர் குறிப்பிட்டார். அதனால் துமிந்த சில்வா உள்ளிட்ட தனது சேவை பெறுநர்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து அவர்களை விடுதலை செய்து, தண்டனையில் இருந்தும் முற்றாக விடுவிக்க வேண்டும் என அவர் கோரினார். இந் நிலையிலேயே இந்த மனுக்கள் இன்று மீள விசாரணைக்கு வருகின்றது.