ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்.
ஐக்கிய தேசிய கட்சியினர் இந்த அரசாங்கத்தில் இருந்துகொண்டு வெறும் வாய் வார்த்தைகளினால் கதைகளை கூறிக்கொண்டுள்ளனர். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லாமல் அவர்களினால் ஆட்சியில் அங்கம் வகிக்கவே முடியாது. அடுத்த தேர்தலில் அவர்களின் தனி அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாகவும் பொது வேட்பாளர் இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரை வேட்பாளராக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் அவர்களினால் கட்சி வேட்பாளரைக் கொண்டு ஒருபோதும் ஆட்சியினை கைப்பற்ற முடியாது.
அவ்வாறு முடிந்திருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க முயற்சித்திருக்க மாட்டார்கள். மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க அவர்மீது இருந்த பாசமோ பற்றோ காரணம் அல்ல. அப்போதிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கமே அதற்கான காரணமாகும். அதற்கான சரியான தெரிவாக மைத்திரிபால சிறிசேனவாக இருந்தமையினாலேயே அவரை பொது வேட்பாளராக்கினர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற அடிப்படையிலேயே போட்டி நிலவியது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் வெற்றி பெறுவாரா அல்லது கட்சியின் செயலாளர் வெற்றிபெறுவாரா என்பதே போட்டியாக இருந்தது. இதில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தோளில் தொங்கிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று தமது வீர வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகின்றமை எமக்கு வேடிக்கையாக உள்ளது.
கடந்த பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருந்தால் அவர்கள் தேசிய அரசாங்கத்தை கலைத்து தனி ஆட்சியினை உருவாக்கியிருப்பார்கள். அவர்களின் சுயரூபம் வெளிப்பட்டிருக்கும்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுயமாக தேர்தலை சந்திக்க எந்த தைரியமும் இல்லை. கடந்த இரண்டு தேர்தல்களின் போதும் அவர்களினால் பொது வேட்பாளர் ஒருவரையே நம்பியிருக்க வேண்டிய நிலைமை இருந்தது. இனியும் அவ்வாறே அமையும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைகளுக்கு முதுகெலும்பு இருக்குமாயின் அவர்கள் தனி வேட்பாளரை களமிறக்கி ஆட்சியினை கைப்பற்றட்டும் எனவும் அவர் குறிப் பிட்டார்.