பேஸ்புக் நிறுவனத்தின் சிறப்பு குழுவுக் கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஒரு கலந்துரையாடலும், பேஸ் புக் குழுவினருக்கும் தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவின் தலைவரும் ஜனாதிபதி செயலருமான ஒஸ்டின் பெர்ணான்டோ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் மற்றொரு கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.
இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்கக பேஸ் புக் நிறுவனத்தின், இந்திய பிரதானி உள்ளிட்ட மூவர் கொண்ட விஷேட குழுவொன்று நேற்று இரவு இலங்கைக்கு வர ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அவ்வாறு வரும் குழுவுடன் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
ஏற்கனவே பேஸ் புக் அதிகாரிகளுடன் தொலைதொடர்பு ஆணைக் குழுவின் அதிகாரிகள் தொலைபேசி பேச்சுக்களை நடாத்தியுள்ள நிலையில், பேஸ் புக் தடையை நீக்க நிபந்தனைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இனவாதத்தை தூண்டும் பதிவு என்றோ , தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றோ தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு அல்லது சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனம் வழங்கும் எந்தவொரு பக்கத்தையும் நீக்குவோம் என பேஸ் புக் நிறுவனம் உறுதியளிக்க வேண்டும் என அரசாங்க தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இனவாத, பிரிவினைவாத செயல்களுக்கு பேஸ் புக் கடும் எதிர் நடவடிக்கைகளை கொள்கையாக கொண்ட நிறுவனம் எனும் ரீதியில் தற்போதும் அவ்வாறான பதிவுகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை எனவும், சிங்கள மொழி அறிந்த மேற்பார்வையாளர்களின் பற்றாக்குறையால் இலங்கை விடயத்தில் இனவாத பதிவுகளை முற்றாக கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் விளக்கமளித்துள்ளது.
இந் நிலையிலேயே இன்றைய உயர் மட்டக் கலந்துரையாடலில் இலங்கையில் பேஸ் புக் பதிவுகளில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும், இனவாதத்தை பரப்பும் நடவடிக்கைகளை முற்றாக கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் உடன்பாடுகள் எட்டப்படவுள்ளன.
அந்த தீர்மானங்களின் பிரகார,ம் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் பேஸ் புக் கணக்குகளுக்குள் இலங்கையர்கள் தடையின்றி நேரடியாக உள் நுழைய வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு தடை அகற்றப்படும் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.
இதனிடையே நேற்று முன் தினம் நள்ளிரவு 12.00 மணி முதல் வைபர் சமூக வலைத்தளம் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் வட்ஸ் அப் சமூக வலைத்தளம் மீதான தடையை நீக்கியதாக அரசாங்கம் அறிவித்தது.
ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு இதற்கான அனுமதியை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவுக்கு வழங்கிய நிலையிலேயே அந்த தடைகள் நீக்கப்பட்டதாக அவ்வாணைக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று முற்பகல் ஆணைக் குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதியை வழங்கியதாகவும் அதன்படியே நேற்று நள்ளிரவு முதல் வட்ஸ் அப் தடையை நீக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.