சொத்து குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான நடராஜன் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். கடந்த அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்த இடங்களில் தற்போது நோய் தோற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் அவரின் உயிர் இன்று பிரிந்தது.
தற்போது பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்னும் சிறிது நேரத்தில் நடராஜனின் சொந்த ஊரான தஞ்சைக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவிற்கு 15 நாட்கள் பிணை வழங்கி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக சசிகலா தஞ்சாவூர் செல்வார் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது கணவரை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நடராஜன் இறுதிச் சடங்களில் கலந்துகொள்ள இளவரசியும், சுதாகரனும் பிணை கிடைக்குமா என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் விசாரித்தபோது அதற்கான வாய்ப்புகள் இல்லை, விண்ணப்பித்தாலும் மனுக்கள் நிராகரிக்கப்படும் என்ற தகவலை அடுத்து இளவரசியும், சுதாகரனும் பிணை கேட்கும் முடிவைக் கைவிட்டுள்ளனர்