இலங்கை மத்திய வங்கி மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் அவ்அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட் டுள்ளது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 43(1) ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக ஜனாதிபதி நேற்று வெளியிட்ட 2064/26 எனும் அதி விஷேட வர்த்தமானியின் பிரகாரம் நேற்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கி இவ்வாறு நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
காலாகாலமாக நிதியமைச்சின் கீழேயே மத்திய வங்கி இருந்து வந்த நிலையில் கடந்த 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் மத்திய வங்கியானது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இருந்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அது முதல் அந்நிலைமை நீடித்த நிலையில், கடந்த 2015 செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட 1933/13 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானியைத் திருத்தியே நேற்று ஜனாதிபதி அதி விஷேட வர்த்தமானியை வெளியிட்டு மத்திய வங்கியை நிதியமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவந்துள்ளார்.
மத்திய வங்கியானது பிரதமர் ரணிலின் கீழ் இருந்ததால், மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையிலும் பிரதமருக்கு சாட்சியமளிக்க வேண்டி ஏற்பட்டது.
அண்மையில் அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில் நேற்று சில அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி அதி விஷேட வர்த்தமானியை வெளியிட்டார். அதன் பிரகாரமே மத்திய வங்கி தற்போது நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் கீழ் கொன்டுவரப்பட்டுள்ளது. அதற்கு பொறுப்பாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர செயற்படுவார்.