சிரிய நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் மீது கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் சுமார் 35 பேர் பலியாகியுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் செலுத்திய ராக்கெட் மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தை ஒன்றில் விழுந்து வெடித்தது. 35 பேரின் உயிர் பறிபோன இந்த தாக்குதலில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். டமாஸ்கஸின் புறநகர் மற்றும் கிழக்கு கவுட்டா பகுதிகளில் போர் உக்கிரம் அடைந்துள்ளதால், மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு ஐ.நா இருதரப்பையும் கோரியுள்ளது.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா அதிகாரியான ஆண்ட்ரஜ் மஹிக், UNHCR படி பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாததால் கடும் சுகாதார அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. அனைத்து முகாம்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன என கவலை தெரிவித்தார். கழிவறைகளை பயன்படுத்தவதற்கு கூட மக்கள் பல மணிநேரம் வரிசையில் காத்து நிற்கின்றனர் என்றார். கிழக்கு கவுட்டாவின் 80 சதவீத பகுதிகளை மீட்டுள்ள சிரிய அரசு படைகள், நகரை முழுகட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.