அண்மைக்காலமாக கிளிநொச்சி பகுதிகளிலுள்ள கோயில்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் என பல இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் வாள் மற்றும் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதிக்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரை அழைத்து அவரை கத்திமுனையில் கொள்ளையில் ஈடுபட்ட போது, அயல் வீடுகளிலிருந்து சத்தங்கள் எழுப்பியதையடுத்து கொள்ளையர்கள் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அயலவர்கள் விரட்டிச் சென்று உந்துருளியை பிடித்தபோது அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களான வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் உந்துருளிபோன்றவற்றை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக பன்னங்கண்டி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்த போது பல மணிநேரம் கழித்து அப் பகுதிக்கு பொலிஸார் வருகைதந்தமையால் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயப்பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.