கண்டியில் பதற்றம் : வீதியெங்கும் மக்கள் கூடியுள்ளதால் பொலிஸார் குவிப்பு, 11 கைது ! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கண்டியில் பதற்றம் : வீதியெங்கும் மக்கள் கூடியுள்ளதால் பொலிஸார் குவிப்பு, 11 கைது !

கண்டி, திகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிமைமை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 இதனால் அப்பகுதியிலுள்ள வர்த்தக  நிலையங்கள்  மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
    இதேவேளை, குறித்த பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்
 இதேவேளை, குறித்த பிரதேசத்தில் சிறு சம்பவங்கள் சிலவற்றைத் தவிர பாரிய சம்பவங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்றும் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் வாகனம் ஒன்றை செலுத்துகையில் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்தமை  தொடர்பாக போதையில்  இருந்த குழுவொன்று சாரதியை தாக்கியதில்  சாரதி கடும் காயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையில் ஒரு வாரத்தின் பின் மரணமான சம்பவத்தையடுத்தே  அப் பகுதியில் அவம்பாவித நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
   கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு மொரகஹமுல என்ற இத்திற்கு அண்மித்த ஒரு மொத்த விற்பனை நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதுடன் உடிஸ்பத்துவ பகுதியிலும் ஒரு கடை எரிக்கப்பட்டதுடன் அம்பாறைப் பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி வந்த வேன் ஒன்றும் வழி மறித்து தாக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கடந்த 3 ஆம் திகதி மரணமடைந்தவரது பூதவுடலை வைத்துக் கொண்டு பாதையை மறித்து சிலர் ஆர்பாட்டங்கள் செய்ய முற்பட்டதை அடுத்து அன்றும் குறித்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
 இதனை அடுத்து பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்பட்ட போதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது கடை ஒன்று தாக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று சம்பவத்தில் இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்யப்படும் போது ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று அச்சம் கொள்ளப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் பதற்றநிலை தோன்றியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
அதேநேரம் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 11 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திகண உடதும்பறை, கெங்கல்ல போன்ற பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் அப்பகுதியில் பாடசாலைகள், இடம்பெறவிருந்த விளையாட்டு போட்டி மற்றும் சிறு சிறு வைபவங்கள் ஆகியன இரத்துச்செய்யபட்டுள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

About Unknown