அரசியல் ஆட்டங்களாலும் வட கொரியாவின் கீழ் நிற்பதாலும் மூன்று பக்கங்களும் நீர் சூழப்பட்டுள்ளதாலும் தென் கொரியாவிற்கு அவ்வப்போது சிக்கல்கள் வருவதுண்டு.
இத்தனைக்கும் அளவில் சிறியது என்றாலும் வட கொரியாவைவிட தென் கொரியாவில்தான் மக்கள் தொகை அதிகம்.
அங்கிருக்கும் பியாங்சாங் என்னும் இடத்தில்தான் 2018-ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக்ஸ் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இது 23ஆ-வது குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டி. இதில் 92 நாடுகளைச் சேர்ந்த 2952 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்க நாள். பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் இருக்கும் ஒரு பகுதி அது. தோராயமாக 200 பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். எல்லோரும் பதின் பருவத்திலிருந்து இருபத்தைந்து வயதிற்குள்ளாகவே இருந்தனர்.
எல்லோருக்கும் ஒரே வண்ணத்தில் சிவப்பு நிற உடை.
கைகளைத் தட்டுகின்றனர். உற்சாகக் குரல் எழுப்பி கோவையாக மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்ட அது, ஒரு நடனம்போல காட்சியளிக்கிறது.
அவர்கள்தான் தென் கொரியாவில் வடகொரிய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த வந்த ‘சியர்லீடர்ஸ் குழு’.
ஆனால் அவர்களின் பணி அது மட்டுமல்ல, வட கொரிய ஜனாதிபதி கிம்மின் கொள்கைகளையும் அவர்கள் நாட்டின் பெருமைகளையும் அரசியல் நிலைப்பாட்டையும் உலகிற்குப் புரியவைக்கவும் அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.
வட கொரியாவின் ‘ஆர்மி ஒவ் பியூட்டிஸ்’ (Army of Beauties) என்று அழைக்கப்படும் அந்தக் குழு, பல வருடங்களுக்குப் பிறகு தங்கள் நாட்டைவிட்டு முதன்முதலாக வெளிவந்திருக்கிறது.
எல்லா நிகழ்விலும் ஒரு செய்தியாக அவர்கள் இடம்பெற்று விடுகிறார்கள். உலக ஊடகங்களும் அவர்கள் குறித்து விவாதித்துச் சலித்து விடுகின்றன.
ஆனால் இம் முறை அவர்களுடன் சேர்ந்து வேெறாரு செய்தியும் முக்கிய இடத்தைப் பிடித்தது.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் நிகழ்வைச் சீர்குலைத்து, தென் கொரியாவைத் தலைகுனிய வைக்க ஒரு சைபர் அட்டாக்கும் நிகழ்ந்திருக்கிறது.
ஒலிம்பிக்ஸ் ெதாடக்கவிழா நடைபெறுவதற்குச் சற்று முன்பு, அந்நிகழ்ச்சியின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பார்க்க வந்த பார்வையாளர்களுக்கு டிக்கெட்டுக்கள் அச்சடித்துக் கொடுக்க முடியவில்லை. 12 மணிநேரங்கள் போட்டியை நடத்துபவர்களாலும் கூட எதையும் செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கு வீரியம் கொண்ட சைபர் தாக்குதல் அது. ஆனால் அதன்பிறகு அதை சரிசெய்துகொண்டு தற்போது போட்டி நடைபெற்று வருகிறது.
92 நாடுகள் இதில் பங்கேற்றிருந்தாலும் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது என்னவோ வடகொரியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.