தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகுகிறது.
தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையேயான காவிரி நதிநீர் விவகாரமானது இரு நூற்றாண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. உச்சநீதிமன்றம் இன்று அளிக்கப் போகும் தீர்ப்பு இப்பிரச்சினைக்கு முடிவைக் கொண்டு வருமா? என்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
2007இல் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்து இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கி.பி.1807ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட பேச்சுவார்த்தைகள் தொடங்கின. ஆனால் இரண்டு நூற்றாண்டுகள் கடந்தும் இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை.
1986-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காவிரி நதிநீர் விவகாரத்துக்கு தீர்வு காண நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார்.
1990ஆம் ஆண்டு வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அப்போது மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது.
25.6.1991இல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை வழங்கப்பட்டது. இந்த இடைக்கால ஆணைப்படி மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா தமது பாசனப்பரப்பை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா ஏற்கவில்லை. இடைக்கால ஆணைக்கு எதிராக அவசர சட்டத்தை கர்நாடகா பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
10.12.1991-இல் காவிரி நடுவர் மன்றத் தின் இடைக்கால ஆணை மத்திய அரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. ஆனால் கர்நாடகா இதை ஏற்கவில்லை.
1997ஆம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணை யம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகளையும் கர்நாடகா நிராகரித்தே வந்தது.
5.2.2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது. காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என்றும் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. நீரும் ஒதுக்கீடு செய்து இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது தமிழகத்தின் உரிமையான டி.எம்.சி.யில் 227 டி.எம்.சி. நீர் தமிழக எல்லைக்குள் ஓடும் காவிரியின் கிளை நதிகளான நொய்யல், பவானி, கொள்ளிடம் ஆகியவற்றிலிருந்து காவிரியில் கலந்துவிடும். எஞ்சிய 192 டி.எம்.சி. (இடைக்கால தீர்ப்பில் 205 டி.எம்.சி.) நீரைத் தான் கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டும். கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கவும் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் கடந்த 11 ஆண்டுகாலமாக விசாரிக்கப்பட்டு இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.