தேசிய அரசாங்கத்தில் நீடித்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் எவ்விதமான தொடர்புகளையும் வைக்கப்போவதில்லை என தெரிவித்த அமைச்சர் விஜித் விஜேமுணி சொய்சா தவறுகளை திருத்திக்கொண்டு பயணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் விஜித் விஜேமுணி சொய்சா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில ,
வழமையான அமைச்சரவை கூட்டமே இன்று ( நேற்று) இடம்பெற்றது. தேசிய அரசாங்கத்தின் நெருக்கடிகள் குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் அவ்வாறானதொரு நெருக்கடியான சூழல் அரசாங்கத்திற்குள் காணப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். சுமூகமாக அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது.
இதனடிப்படையில் இணக்கப்பாடுகளுடன் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். இதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் அனைத்து விடயங்களிலும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றில்லை. அதே போன்று தேசிய அரசாங்கம் என்றாலும் பிரதமருடன் எவ்விதமான தொடர்புகளையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேற்கொள்ளாது. ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்ததே பயணிக்க உள்ளோம்.
நடை;பெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மக்கள் எமது கண்ணத்தில் அறைந்துள்ளனர். எனவே மீண்டும் தவறுகைள செய்யாது புதிய வழியில் தவறுகளை திருத்திக்கொண்டு பயணிக்க வேண்டும். பொது மக்களின் தேவைகள் மற்றும் நலன்கள் மீது கவனத்துடன் செயற்பட வேண்டும்.
வறுமையில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப சுதந்திர கட்சி பாடுபடும். மேலும் கிராமங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும். இதனையே ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வலியுறுத்தினார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.