கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் 366 ஆவது நாளான நேற்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.
வடக்கு, கிழக்கில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அமைப்பின் பிரதிநிதிகளும், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும், அரசியல்வாதிகள் மற்றும் மதகுருமார்கள், தென்னிலங்கை அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நண்பகல் ஒரு மணிவரை இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றங்களை மறைக்க சட்டத்திருத்தமா?, சர்வதேசமே உள்நாட்டு பொறிமுறையில் எமக்கு நம்பிக்கையில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் சர்வதேசத்திற்கான கண்துடைப்பு, சர்வதேசமே எங்களுக்கு நீதி வேண்டும், நீதி கேட்கும் எமக்கு நிவாரணம் எதற்கு? அடைக்கலமாக கொடுத்தவர்களை அரசு காணவில்லை என்று கூறுவது எப்படி நியாயமாகும்?, ஐ.நா.வே பன்னாட்டு தலையீட்டுடனான நீதி பொறிமுறையே எமக்குத் தேவை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமற்போன ஊடகவியலாளர் எக் னெலி கொடவின் மனைவி, காணாமற்போனோரை தேடியறியும் குழுவின் இணைப்பாளர் சக்திவேல் உட்பட தென்பகுதியைச் சேர்ந்த பலரும் பங்கேற்றிருந்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரசார செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக தெரிவாகியுள்ளவருமான சி.பாஸ்கரா உட்பட பல அரசியல்வாதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் களின் அமைப்பினைச் சேர்ந்த கலாரஞ்சனி,
எங்களது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலை யில் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. நாட்டின் ஜனாதிபதியும் எங்கள் விடயத்தில் கைவிரித்து விட்டார். நாங்கள் கேட்பது எங்களது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இருக்கின்றார்களா? இருக்கின்றார்கள் என்றால் எங்கு இருக்கின்றார்கள்? எப்போது விடுவிக்கப்படுவார்கள்? அல்லது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உயிரோடு இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதுவேயாகும். இதனைப் பொறுப்புடன் கூற வேண்டிய அரசு பொறுப்பற்று நடந்துகொள்கின்றமை வருத்தமளிக்கிறது.
இலங்கை விடயம் தொடர்பில் ஐ.நா.வுக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் ஒரு வருடம் நிறைவுபெற்றுள்ள நிலையில் இதுவரைக்கும் நம்பிக்கை தரும் வகையில் எதுவும் இடம்பெறவில்லை. ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இலங்கை அரசை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையேயாகும். எங்களை பொறுத்தவரை இந்த இரண்டு வருடகால அவகாசம் என்பது ஒரு பயனற்ற நடவடிக்கையேயாகும். தமிழ் அரசியல் தரப்புக்கள் தங்களின் கட்சி பேதங்களை கடந்து எங்களின் பிரச்சினைகளுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறே சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் எங்க ளுக்காக கடந்த காலம் போன்று குரல் எழுப்ப வேண்டும். இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு வழங்கியி ருந்தது. இருந்தும் தற்போதைய நிலையில் எங்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு நம்பிக்கை சர்வதேசமே எனவும் குறிப்பிட் டார்.