நடைபெற்று முடிந்த தேர்தலில் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்துள்ளது.
கடந்த காலங்களை விடவும் அமைதியாக முறைப்பாடுகள் குற்ற ங்கள் குறைந்த
ஒரு தேர்தல் இடம்பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது. எனினும் தேர்தல்
முடிவுகளில் தாமதம் ஏற்பட்டமைக்கு நான் தனிப்பட்ட ரீதியில்
பொறுப்பேற்கத்தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த
தேசப்பிரிய தெரிவித்தார்.
எம்முடன் இணைந்து பணியாற்ற தமிழ் மொழிமூல அதிகாரிகள் இல்லாமை
பாரிய நெருக்கடியெனவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல்கள்
திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டமைக்கு
தனிப்பட்ட காரணிகள் அல்லது சூழ்சிகள் என எவையும் இல்லை. எனினும்
தேர்தல் முடிவுகள் அனைத்தும் உரிய வட்டாரங்களுக்கு 12 மணியளவில்
தெரிவிக்க முடிந்தது. மக்களுக்கு பொதுவாக தெரிவிக்கும்
செயற்பாடுகளில் சிக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு தேர்தல் தரவுகளை
வெளியிடும் கணினிகளின் தொழிநுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறான
தாமதங்கள் ஏற்பட்டன. அதேபோல் எமக்கு இருக்கும் மிகப்பெரிய
சிக்கலானது எமக்கான தமிழ் மொழிபெயர்ப்பு உதவியாளர்கள்
இல்லாமையேயாகும். சிங்கள தமிழ் மொழியில் நாம் கடமையாற்றும்
நிலையில் சிங்கள மொழி செயற்பாடுகள் குறித்து விரைவாக செயற்பட முடிந்த
போதும் தமிழ் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் கையாள எமக்கு போதிய
தகுதியான நபர்கள் இல்லை.
ஆகவே மொழிபெயர்ப்பு செயற்பாடுகள் அனைத்தினையும் முன்னெடுக்கும்
போது கால தாமதம் ஏற்படுகின்றது. இந்த விடயங்கள் குறித்து நாம் உரிய
அதிகாரிகளிடம் பல தடவைகள் தெரிவித்துள்ளோம். ஆனால் எந்தவித
நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனினும் இவற்றை காரணம் காட்டி
நான் தப்பித்துக்கொள்ள தயாராக இல்லை. ஆகவே எல்லாவற்றின்
பொறுப்பையும் நான் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொள்கிறேன்.
தேர்தல் குறித்து சில முறைப்பாடுகள் இன்றும்
பதிவாக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் தினங்களில் மேலும் சில தேர்தல்
முறைப்பாடுகள் பதிவாகும். எனினும் இவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத
ஆதாரமற்ற முறைப்பாடுகளும் உள்ளன. ஆயுதமேந்தி வந்த குழுவினர்
வடக்கில் ஒரு பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தியதாக முறைப்பாடு
பதிவாகியுள்ளது. ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்கள் இருந்த
ஒரு வாக்குச்சாவடியில் அவ்வாறான சம்பவம் இடம்பெறுவது என்பது
ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.
அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அங்கிருந்த அனைவருமே
பொறுப்புக்கூற வேண்டும். எனினும் குறித்த முறைப்பாடு தொடர்பில் நாம்
அவதானம் செலுத்தி வருகின்றோம். ஏனைய சாதாரண முறைப்பாடுகள் சிலவும்
பதிவாகியுள்ளன. அவை தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முறைப்பாடுகளுக்கு அமைய தெரிவுசெய்யப்பட்ட நபர்கள் மீது குற்றம்
உறுதியாகும் பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோன்று
மார்ச் மாதம் 6 ஆம் திகதியே சபைகள் அமைக்கப்படவுள்ள நிலையில்
பதவிவிலகும் நபர்கள் 6 ஆம் திகதியின் பின்னரே அவ்வாறு இராஜினாமா
செய்ய முடியும். குறிப்பாக சுயேச்சைக் குழுக்களில் தெரிவுசெய்யப்பட்ட
நபர்கள் அவ்வாறே விலக முடியும்.
நடைபெற்று முடிந்த தேர்தல் குறித்து மகிழ்ச்சியாகவும் அதே
நிலையில் கவலையாகவும் உள்ளது. அமைதியான முறையில் தேர்தல்
இடம்பெற்றுள்ளது, சில குற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் கடந்த
காலங்களை விடவும் நல்ல வகையில் மக்கள் ஜனநாயகத்தை உணரும் வகையில்
தேர்தல் இடம்பெற்றுள்ளது. சிலர் பொய் பிரச்சாரங்களை செய்து எம்மை
விமர்சித்த போதிலும் உண்மைகள் என்னவென்பது சகல அரசியல்
கட்சிகளுக்கும் தெரியும். தேர்தல் முடிவுகளை வெளியிடும் நேரம் சகல
கட்சிகளின் பிரதிநிதிகளும் எம்முடன் இருந்தனர். நாம் சுயாதீனமாக
செயற்படுவது அனைவருக்கும் தெரியும். எனினும் தேர்தலின் பின்னர் சில மோசமான
சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்பு சம்பவங்கள் சில இடம்பெற்றமை
வருத்தமளிக்கின்றன. எவ்வாறு இருப்பினும் மக்களுக்கு ஜனநாயகம்
கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.