தற்போது இருக்கும் மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக பதவி விலகி, மக்களின் ஆணையை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), தன்னுடைய கணிப்புச் சரியாகிவிட்டது. மாகாண சபைத் தேர்தலில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்லதொரு பாடம் புகட்டுவோம் என்றும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலின் கீழ், போட்டியிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதிக உள்ளூராட்சி மன்றங்களின் ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதையிட்டு கிரானில், நேற்று இனிப்பு வழங்கி பாராட்டப்பட்டது.
தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் இளைஞர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்துத் தெரிவிக்கையில்,
“மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதிகளவான உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றி, பாரிய வெற்றியைப் பெறுமென கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தேன்
“எனது கட்சி எதிர்நோக்கிய கன்னித் தேர்தல் இதுவாகும். அதை மக்கள் அங்கிகரித்துள்ளனர். அதையிட்டு பெருமைப்படுகின்றேன். எதிர்காலத்தில், சிறந்ததோர் அரசியல் காய் நகர்த்தலை நகர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளேன்” என்றும் அவர் கூறினார்.
“அதனடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் நா.திரவியம் (ஜெயம்) என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், எமது இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டுள்ளோம். ஏனெற்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழர்களின் வாக்குகளைப்பெற்றுக்கொண்டு, சகோதர இனத்தைப் பலப்படுத்துவதில் அக்கறையாக உள்ளனர். இவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும்” என்றார்