தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லும் விடயத்தில்
முரண்பாடு நிலவிவருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை
நேற்று முன்தினம் இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்
ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சந்தித்து பேசியதையடுத்து
நிலைமை சுமுகமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும்
இருதரப்பினருக்குமிடையில் இன்னும் முறுகல் நிலை நீடித்து
வருகின்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து அரசாங்கத்திற்குள்
பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவை கடந்த திங்கட்கிழமை இரவு பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியினர்
சந்தித்து பேசியபோது பிரதமர் பதவியிலிருந்து ரணில் விலகி
அக்கட்சியை சேர்ந்த மற்றொருவரை பிரதமராக
நியமிக்கவேண்டுமென்று ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தனித்து
ஆட்சி அமைக்கவேண்டுமென்று ஐக்கிய தேசியக்கட்சியினர்
வலியுறுத்தினர். ஐக்கிய தேசியக்கட்சியின்
அமைச்சர்கள்,பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல
தரப்பினரும் தனித்து ஆட்சி அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து
சுட்டிக்காட்டியிருந்தனர்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சி
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின்
கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கான வழிவகைகள் குறித்து
ஆராய்வது என்றும் அந்த முயற்சிக்கு ஜனாதிபதி இணங்காவிடின்
தனித்து ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை உருவாக்குவது என்றும்
தீர்மானிக்கப்பட்டது. இந்தக்கூட்டத்தை அடுத்து ஜனாதிபதியை
ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.
ஆட்சியமைக்க சுதந்திரக்கட்சி முயற்சி
இதன் பின்னர் சுமுக நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட
போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்ற விடயத்தில்
விடாப்பிடியாக உள்ளதாக தெரிகின்றது. பிரதமர் பதவி
விலகாவிட்டால் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களில் ஒரு
பகுதியினரையும் வரவழைத்து சுதந்திரக்கட்சியினரின் ஆட்சியை
அமைப்போம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையின கட்சிகளை
ஒன்றிணைத்து சுதந்திரக்கட்சியின் ஆட்சியினை அமைப்பது குறித்தும் அவர்கள்
ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி
வருவதாக தெரிகின்றது. இவ் விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான
பொது எதிரணியின் பாராளுமன்றக்குழு ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன
தலைமையில் இந்தக்குழு ஜனாதிபதியை சந்தித்ததுடன்
பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
சுதந்திரக்கட்சிக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை
முறியடிக்கும் வகையில் தாம் ஆதரவு வழங்குவதாக
உறுதியளித்துள்ளதாக தெரிகின்றது.
இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளும் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாடு
மேலோங்கிவருவதாக தெரிகின்றது. பெருமளவானோர் அவருக்கு ஆதரவாக
இருக்கின்றபோதிலும் சில தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்
மாற்றம் ஏற்படவேண்டுமென்று கோரி வருகின்றனர். ஐக்கிய
தேசியக்கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டியதன்
அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று அலரிமாளிகையில்
ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு பல
குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.இந்தக் குழுக்கள் நியமனம்
தொடர்பில் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா கடும் அதிருப்தி
தெரிவித்துள்ளார். குழுக்களை அமைப்பதன் மூலம் அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல
முடியாது. அரசாங்கத்தை முன்கொண்டு செல்லவேண்டுமானால் கட்சிக்குள்
மாற்றங்களை செய்யவேண்டும். குழுக்களை அமைத்து நேரத்தை கடத்த கூடாது என்று
அதிருப்தி தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை தொடர்ந்தால் அடுத்த மாகாணசபைத்
தேர்தலில் தோல்வி அடையவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.