அத்துடன் இந்த பேச்சுவார்த்தையின் போது மாற்றங்கள் செய்யப்படவுள்ள புதிய அமைச்சர்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் புதிய தேர்தல் முறைமை தொடர்பாக விரிவாக ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது.
தேசிய அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமை தொடர்பாக நேற்றைய தினமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றன. இந்த கூட்டத்திற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலை 9.30 மணிக்கு அலரிமாளிகையில் ஆரம்பமானது. இந்த கூட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய அரசாங்கத்தில் காணப்படும் குறைப்பாடு நிவர்த்தி செய்வது குறித்து ஆராய்ந்த போது அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியில் இருந்து சுயாதீனமாக செல்ல சிலர் முயற்சிப்பதனை அடுத்து ஏனையோரை தேசிய அரசாங்கத்தில் இணைத்து கொண்டு பயணிப்பது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேசிய அரசாங்கத்தின் எதிர்கால நகர்வு தொடர்பில் நேற்று முன் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் சராம்சம் பாராளுமன்ற குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் அமைச்சர்களுமான சஜித் பிரேமதாஸ, கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்குபற்றியுள்ளார். இந்த சந்திப்பின் போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும இணங்கியுள்ளார். இதன்படி ஜனாதிபதியின் இணக்கத்தை பாராளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.
அத்துடன் காலதாமதம் இ்ன்றி ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன்போது புதியவர்களுக்கு கட்சியின் பிரதான பொறுப்புகளை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆட்சியை ஸ்திரமாக்கியதன் பின்னர் கட்சி மறுசீரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக்க கட்சியில் துரிதமாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என நேற்றைய கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
பாராளுமன்ற குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஊடகஙகளுக்கு கருத்து தெரிவித்தனர்.
கபீர் ஹாஷிம்
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும். மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை நாம் தொடர்ந்து கொண்டு செல்வோம். இதன்போது அரசாங்கத்தை முதலில் ஸ்திரமான நிலைமைக்கு கொண்டு வந்து அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஆகவே துரிதமாக நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். தற்போது அரசாங்கத்திற்கே பெரும்பான்மை பலம் உள்ளது. வேறு யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடையாது. மேலும் சுதந்திரக் கட்சியினர் தனித்து ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்தால் அதன் பின்னர் நாம் கூடி எமது பலத்தை நாம் நிரூபிப்போம். இதன்போது உறுதியான தீர்வினை நாம் எடுப்போம்.
தனித்து ஆட்சி அமைப்பதாக பலர் தமது தனி கருத்துகளை கூறலாம். ஆனால் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதே எமது நோக்கமாகும் .இதன்படி புதிய வழிகளின் பிரகாரம் பயணிப்போம் என்றார்.
வஜிர அபேவர்தன
இதன்போது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கருத்து வெளியிடுகையில்,
தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலைமைப்பில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரமே தீரமானம் எடுப்போம். ஊடகங்கள் முதலில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை தெரிந்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. பழைய அரசியலமைப்பினை முன்வைத்தே சுதந்திரக் கட்சியினர் தனித்து ஆட்சி அமைக்க முயல்கின்றனர். அதனை விடுத்து தற்போதைய அரசியலமைப்பில் பிரதமரை நீக்கவோ அல்லது ஆட்சியை கவிழ்க்கவோ தற்போதைக்கு முடியாது.
தற்போது எமது அரசாங்கம் தான் உள்ளது. ஆகவே மறுபடியும் எதற்கு எமது அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
கயந்த கருணாதிலக
இதன்போது அமைச்சர் கயந்த கருணாதிலக கருத்து வெளியிடுகையில்,
இந்த கூட்டத்தில் தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வது தொடர்பில் ஆராயப்பட்டது. நாம் எமது கருத்துகளை முன்வைத்தோம். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியிலும் தேசிய அரசாங்கத்திலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என கோரினோம். இதன்போது மக்கள் உணரும் வகையிலான மாற்றங்களை செய்யவுள்ளோம். பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஒன்றாக பயணிப்பது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றார்.
அசோக அபேசிங்க
இதன்போது இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க கருத்து வெளியிடுகையில்,
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம். ஆகவே யாரும் அஞ்ச வேண்டியதில்லை. சுதந்திரக் கட்சியினர் சிலர் விலகவுள்ளதாக தெரியவருகின்றது. அது எமக்கு பிரச்சினையில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எவராவது விலகினால் அவர்களது வெற்றிடத்திற்கு வேறொருவரை நியமித்து எமது பயணத்தை தொடர்வோம். அமைச்சரவையிலும் மாற்றங்கள் ஏற்படும். தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும் என ஜனாதிபதி இன்று நாட்டுக்கு அறிவிப்பார் என்றார்.
காவிந்து ஜயவர்தன
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் காவிந்து ஜயவர்தன கருத்து வெளியிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும் அச்சத்தில் உள்ளார். அடுத்த இரு வருடத்தில் சிறைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால் அதன் காரணமாக ஆட்சியை கவிழ்க்க முனைகின்றார். தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். இதற்கான அனுமதியை கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தனி ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றே நாம் நினைத்தோம். எனினும் நல்லாட்சி நீடிக்க வேண்டும் என கட்சியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
நளின் பண்டார
இங்கு குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கருத்து தெரிவிக்கையில்,
பலமான அரசாங்கத்தை அமைக்க இணக்கத்திற்கு வந்துள்ளோம். ஆகவே அரசாங்கத்தின் வியூகம் எப்படியானது என்பது தொடர்பில் தெளிவில்லை. ஜனாதிபதியின் கெளரவத்தை பாதுகாத்து தொடர்ந்து ஆட்சியை கொண்டு செல்வோம். அண்மையில் நடந்த தேர்தலில் உள்ளூராட்சி மன்ற ஆட்சிக்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இதன்படி இன்னும் இரண்டு மாதத்தில் ஆணை வழங்கிய மக்கள் தாம் செய்த தவறுகளை புரிந்துக்கொள்வர். எதிர்வரும் காலங்களில் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்ய வேண்டும் என பிரதமர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதன்படி முதலில் ஆட்சியை ஸ்திரமான நிலைமைக்கு கொண்டு வந்த பின்னர் கட்சியில் மாற்றங்களை செய்யவுள்ளோம்.
மக்கள் உணரும் வகையிலான ஆட்சியை நாம் உருவாக்கவுள்ளோம். தனி ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். இதன்படி பாரிய மாற்றங்களை அரசாங்கத்திற்குள் நாம் செய்வோம். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை ஒத்த சாயலை புதிய அமைச்சரவையில் நிரூபிப்போம். அமைச்சரவை உட்பட பல துறைகளில் மாற்றங்கள் ஏற்படும். சமுர்த்தி உட்பட அனைத்து துறையும் மாற்றம் காணும். இதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ள வியுகங்கள் மாறியே ஆட்சியே வரபோகின்றது. தேர்தல் முறைமை தொடர்பாக கலந்துரையாட தீர்மானம் எடுக்கப்பட்டது.
முன்னைய ஆட்சியின் போது அலரி மாளிகையில் மதுபானம் மற்றும் தானம் வழங்கப்பட்டது. எனினும் தற்போது அப்படி இல்லை. நாம் மதுபானம் அருந்துகின்றோம். எனினும் தகுந்த இடத்தில் அதனை செய்வோம். அலரிமாளிகையில் அதனை செய்ய மாட்டோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட அலரி மாளிகையில் உண்ணுவதோ பருகுவதோ கிடையாது என்றார்.