தனித்த பயணம் ஒன்றை முன்னெடுக்கும் கொள்கையில் நாம் தொடர்ந்தும்
செயற்பட்டு வருகின்றோம். அடுத்து வரும் 48 மணிநேரத்தில் எந்த
சவாலையும் எதிர்கொள்வோம். எமது நிலைப்பாட்டில் உறுதியாக
இருக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர்
தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இதில் ஸ்ரீலங்கா சுதந்திர
கட்சியாக எதிர்காலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து
முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின் பின்னரே
சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு
குறிப்பிட்டனர்.
இது குறித்து அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த கூறுகையில்;
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு அமைச்சரவை கூட்டத்தின்
பின்னர் கூடியது.இதன்போது நாம் கட்சியின் அடுத்தக்கட்ட
நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன்
கலந்துரையாடினோம்.குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து பயணம்
ஒன்றினை முன்னெடுக்கவே தீர்மானித்து வருகின்றது.அதற்கான
நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.அதே நிலையில் நாம்
ஐக்கிய தேசியக் கட்சியின் சவால்களுக்கோ ஏனையோரின் சவால்களுக்கோ
ஒருபோதும் அஞ்சவில்லை.எந்த சவால்கள் வந்தாலும் அதனை நாம் எதிர்கொள்ள
தயாராகவே உள்ளோம்.எமது தரப்பினர் வேறு அணிகளை பலப்படுத்துவதையோ
அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கூட்டணியில் இணையவோ
தயாராக இல்லை.ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் தான் நாமும் உள்ளோம்.அடுத்த
48 மணித்தியாலங்கள் எந்த சவாலையும் எம்மால் எதிர்கொள்ள முடியும்.அதன்
பின்னர் எமது நிலைப்பாடு என்னவென்பது தெரியவரும் எனக்
குறிப்பிட்டார்.
இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க கூறுகையில்,
நாம் முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் நாளை மறுதினம் அனைவருக்கும்
தெரிய வரும்.ஜனாதிபதி விசேட அறிவித்தல் ஒன்றினை விடுக்கவுள்ள
நிலையில் அதில் எமது நிலைப்பாடு என்னவென்பது தெரியும். ஜனாதிபதியும்
-பிரதமரும் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற
வேண்டும். அவற்றில் குறைகள் இருக்கும் என்றால் அவற்றை நிவர்த்தி செய்யவும்
வேண்டும். இப்போது வரையில் ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை கூறி
வருகின்றனர்.மாறாக கட்சியின் நிலைப்பாடு என எதுவும் இல்லை. நாம் என்ன
தீர்மானம் எடுத்தோம் என்பது தெரியவரும்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
முடிவுகளின் மூலம் தனி அரசாங்கம் ஒன்று அமைப்போம் என கூறுவதற்கு நாம்
வெட்கப்பட வேண்டும். இந்த தேர்தல் முடிவுகள் மூலமாக அரசாங்கம்
அரசாங்கத்தின் வேலையினை செய்ய வேண்டும்.உள்ளூராட்சி சபைகளை வெற்றி
கொண்ட கட்சியினர் அவர்களின் கடமையினை செய்ய வேண்டும். நாட்டினை
சரியாக முன்னெடுத்து செல்ல வேண்டிய கடமை எமக்கு உள்ளது. அதனை
புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தில் தவறுகள் உள்ளன. அதனால் தான் இந்த அரசாங்கத்தை
பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்து வருகின்றனர்.ஐக்கிய தேசியக்
கட்சியின் நிலைப்பாடு தான் இன்று குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது.இந்த தேர்தலின் மூலம் மக்கள் எமக்கு விடுத்துள்ள
எச்சரிக்கையினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இப்போதாவது
கள்ளர்களை தண்டிக்க வேண்டும் என்ற செய்தியை மக்கள் விடுத்துள்ளனர்.
அதைத்தான் மக்கள் எதிர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் எனக்
குறிப்பிட்டார்.
அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
, நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக இணைந்து தொடர்ந்தும் செயற்படுவோம்.
யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நாம்
சரியான செயற்பாடுகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.