சர்ச்சைக்குரிய பிணைமுறிகள் விற்பனை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய அதிகாரபீடங்களுக்கு அனுப்பி துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொதுசொத்துக்கள் துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சம்பந்தன் உண்மையின் பக்கமே கூட்டமைப்பு இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய இலங்கை மத்தியவங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழவின் பரிந்துரைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் கையளிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து ஆணைக்குழவின் பரிந்துரைகளை கவனத்திற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிஹேன மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய அனைவருக்கும் எதிராக குற்றவியல் சிவில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளமைக்கு இணங்க நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளேன் என்று அறிவித்துள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வௌியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது பிணைமுறிகள் விடயம் சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது தனது பரிந்துரைகளை ஜனாதிபதியிடத்தில் பாரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியும் தனது நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆணைக்குழவின் பரிந்துரைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக எடுக்கவேண்டும். ஊரிய அதிகார பீடங்களுக்கு அவை அனுப்பப்பட்டு தமதமின்றி துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது நாம் மேற்பார்வையாளர்களாக இருப்போம். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இந்த நாட்டில் பொதுச்சொத்துக்கள் முறையற்ற வகையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகமாக பயன்படு்தவதற்கு எவ்விதமான அங்கீகாரமும் யாருக்கும் கிடையாது. கடந்த காலங்களில் இவ்விதமான விடயங்கள் பல இடம்பெற்றிருக்கின்றன. அதேபோன்று தான் ஊழல் மோசடிகள் தொடர்பான விடயங்களும் இடம்பெற்றுள்ளன. இவ்விதமான செயற்பாடுகள் அனைத்தும் எதிரான நிலைப்பாட்டினையே நாம் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள பொதுச் சொத்து துஷ்பிரயோகங்கள், ஊழல்மோசடிகள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அவை பகிரங்கப்படுத்தப்பட்டு சட்டத்தின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும். நாம் எப்போதும் உண்மையின் பக்கமே இருப்போம் என்றார்.