டோக்கியோ: ஜப்பானில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் சப்போரோ பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள முதியோருக்கு உதவும் வகையில் உள்ளூர் அமைப்பு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் செயல்பட்டு வருகிறது. 3 தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் 16 முதியோர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த இல்லத்தில் நேற்று இரவு மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியதால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீபத்தில் 8 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் தீக்கரையானது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.