சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை! பதை பதைத்த கடைசி நிமிடங்கள்... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை! பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவைச் சேர்ந்தவரான இருபத்தொன்பது வயதான பிரபாகரன் ஸ்ரீவிஜயன் வழக்கு விசாரணை கோலாலம்பூரின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த நிலையில் பிரபாகரனின் மரண தண்டனையை ஒத்திவைக்க அவரது சட்டத்தரணி கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனாலும் குறித்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்று நிராகரித்ததுடன், பிரபாகரனின் தண்டனையை அவ்வாறு நிறுத்த முயல்வது முறையற்றது என்றும் கண்டித்திருந்தனர். இதனால் அவரது மரண தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 2012ம் ஆண்டு சிங்கப்பூர் குடிநுழைவு மையத்தில், குறித்த நபர் ஓட்டி வந்த காரில் இருந்து 22.24 கிராம் டியோமார்ஃபின் (diamorphine ) என்ற போதைப் பொருளை சிங்கப்பூர் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.
ஆனாலும், அந்தக் கார் தன்னுடையது இல்லை என்றும், நாதன் என்பவரிடம் இருந்தே குறித்த காரை பெற்றதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பது தனக்குத் தெரியாது என்றும் பிரபாகரன் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார்.
இதன்பின்னர் ”மருந்துகளை தவறாக பயன்படுத்தும் சட்டம், பிரிவு 7”ன் கீழ் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி பிரபாகரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டு பிரபாகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் பதை பதைத்த குரலில் தன்கடைசி நிமிடங்களில் உரையாடியதை தன்னால் அறியக் கூடியதாக இருந்ததாக கூறும் அவர் தரப்பு சட்டத்தரணி இறுதி வரை போராடியும் காப்பாற்ற முடியாமல் ஆகிவிட்டது என குறித்த சட்டத்தரணியை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

About UK TAMIL NEWS