இலங்கையின் கொக்கிளாய் பிரதேசத்தில், கடலில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்த யானையை அந்நாட்டு கடற்படையினர் பத்திரமாக மீட்டு கரையில் சேர்த்தனர்.
இலங்கை வடக்கு கடல் எல்லையின், கொக்கிளாய் பிரதேசத்தில் அந்நாட்டு கடற் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது யானை ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதை கண்டனர்.
இதனையடுத்து, கடற்படை வீரர்கள் உடனடியாக யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில் வனவிலங்கு ஆணைய அதிகாரிகளும் இணைந்து, அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப யானையைக் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக அதிக அளவு ஆட்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, மிக பெரிய கயிற்றின் மூலம் வெகுநேரத்திற்கு பிறகு யானையை மீட்டு கரையில் சேர்த்தனர். யானையை மீட்டெடுத்த பின்பு வனவிலங்குப் பராமரிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு வனவிலங்கு பராமரிப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கரையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த யானை தத்தளித்துக் கொண்டிருந்தது. கரையோரமாக சென்று கொண்டிருந்த போது அலைகளால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.