தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் 10 பேரை கைது செய்தமைக்காகவே ஸ்ரீலங்கா விமானப்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச டி.கே.பி.தசநாயக்க விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
விமல் வீரவன்ச “10 இளைஞர்கள் காணாமற்போன சம்பவம் தொடர்பிலேயே டிகே.பி.தசநாயக்க கைது செய்யபட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீன் கொண்டுசெல்லப்படும் லொறி ஒன்றில் திருகோணமலையில் இருந்து குண்டுகளை கொழும்பிற்கு கொண்டுவர தயாரானார்கள். இது தொடர்பில் கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் கிடைத்தது.
அந்த லொறியில் வந்தவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 10 பேரின் தகவல்கள் கிடைத்தன. அதன் பின்னர் அந்த புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த காரணத்திற்காகவே இவர் (டி.கே.பி.தசநாயக்க) உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொய்யுரைத்து எம்மை காத்த வீரர்களை கைது செய்ய இடமளிக்க முடியாது.
நாட்டிற்கு துரோகம் இழைக்கும் இந்த அரசாங்கம் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். நாளைய தினம் யுத்தத்திற்கு தலைமை வகித்த இராணுவத் தளபதிகளும் கைது செய்யப்படலாம்.
இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும். 10 பேர் காணாமற்போன சம்பவம் தொடர்பிலான நீதிபதி திணைக்களத்தின் 51 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் கடற்படையின் எவரையும் கைது செய்ய முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களையும், மனித உரிமைகள் பேரவையை மகிழ்ச்சிப்படுத்தவுமே இந்த கைது இடம்பெற்றுள்ளது. அவர்களை மகிழ்ச்சிப்படுத்த யுத்த வீரர்களை பலி கொடுக்கின்றது இந்த அரசாங்கம்.“
இதேவேளை, இந்த ஊடகசந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச பிரிவினைவாத சமஷ்டி அரசியல் யாப்பு ஒன்று ஜெனீவா நிகழ்ச்சி நிரலுக்கு அமைய உருவாக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
விமல் வீரவன்ச “பிரிவினைவாத அரசியல் யாப்பு ஒன்று ஜெனீவா நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே உருவாக்கப்படுகின்றது. சமஷ்டி யாப்பு ஒன்றை உருவாக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாப்பு வரைபு உருவாக்கப்படவில்லை என பலர் தெரிவிக்கின்றனர். எனினும் அது உருவாக்கிவிட்டாகிவிட்டது.
தேவையான நேரத்தில் நாம் அதனை வெளிப்படுத்துவோம். அதுவும் மேற்கத்தேய நாடுகளை மகிழ்ச்சிப்படுத்தவே உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்றால் இராணுத்தில் எதுவும் மிச்சமிருக்காது.“