75 பெண்களை ஏமாற்றிய ‘மன்மத ராஜா’ - Eelatheepam Sri Lankan Breaking NEWS

75 பெண்களை ஏமாற்றிய ‘மன்மத ராஜா’

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 75 பெண்களை ஏமாற்றிய எத்தன் ஒருவனை கர்நாடக மாநில பாகலூர் போலீசார் சமீபத்தில் கைது செய்திருக்கின்றனர்.
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 75 பெண்களை ஏமாற்றிய எத்தன் ஒருவனை கர்நாடக மாநில பாகலூர் போலீசார் சமீபத்தில் கைது செய்திருக்கின்றனர். 75 பெண்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தாலும், ஏமாற்றப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது.
28 வயதாகும் சடத்கான் என்ற பிரீத்தம்குமார் என்ற கார்த்திக்தான் அந்த மன்மத எத்தன். இவனால் ஏமாற்றப்பட்டவர்களில், ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டாக்டர், பேராசிரியை மற்றும் சில அரசு ஊழியைகளும் அடங்குவர்.
பெங்களூரு, ஹூப்ளி, மைசூரு என கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல, மாநில எல்லை தாண்டியும் தனது லீலையைக் காட்டியிருக்கிறான், சடத்கான்.
திருமண இணையதளம் மூலம் பெண்களைத் தொடர்புகொண்டு அவர்களை வசிய வார்த்தை களால் வளைத்து, பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொள்வதுடன், பணத்தையும் கறந்துவிடுவது சடத்கானின் ஸ்டைல்.
ஒரு திருமண இணையதளத்தில் பதிவு செய்துகொண்ட சடத்கான், அதன் ‘பிளாட்டினம்’ உறுப்பினர் ஆகியிருக்கிறான். அதன் மூலம், திருமணத்தை எதிர்நோக்கும் பணக்காரப் பெண்களை தொடர்புகொள்ளும் வழி ஏற்பட்டிருக்கிறது. திருமணமாகாத பெண்களுடன், விதவைகள், விவாகரத்து ஆனவர்களையும் குறிவைத்திருக்கிறான்.
வெவ்வேறு திருமண இணையதளங்களில் வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறான் இவன். அப்படி சடத்கான் பயன்படுத்திய பெயர் களில் சில… ராகுல் ராஜ்குமார், பிரேம் சாகர், கார்த்திக்.
தான் தொடர்புகொள்ளும் பெண்ணின் வரன் எதிர்பார்ப்புக்கு ஏற்பத் தன்னை ‘கெஜட்டட்’ அரசு அதிகாரி, தொழிலதிபர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் என்று அறிமுகப்படுத்திக்கொள்வது சடத்கானின் வழக்கம். பெண்களுடன் இனிக்க இனிக்க ‘சாட்’ செய்யும் இவன், குறிப்பிட்ட சில நாட்கள் கழிந்ததும், ‘நாம் நேரில் சந்தித்துப் பேசலாமே?’ என்பான்.
எதிர்த்தரப்பில் இருந்து பச்சை சிக்னல் கிடைத்ததும், பிஎம்டபிள்யூ, ஆடி என்று ஆடம்பர கார்களில் (வாடகைதான்!) பந்தாவாக போய் இறங்குவான். சந்திப்புக்கான ஸ்தலமாக அவன் நிர்ணயிப்பதும் நட்சத்திர ஓட்டல்கள்தான். முதல் ஒன்றிரண்டு சந்திப்புகளில் பணத்தைக் கணக்கின்றி இறைத்து, குறிப்பிட்ட பெண்ணைத் திகைக்க வைப்பான். பரிசு மழை பொழிந்து மயங்கவும் நெகிழவும் வைப்பான். பெண்கள் உருகும் ஒரு கணத்தில் அவர்களை வீழ்த்திவிடுவான்.
ஒரு பெண்ணுடனான அடுத்தடுத்த சந்திப்புகளில் சடத்கான் பணம் செலவழிப்பது படிப்படியாகக் குறையும். முடிந்தால், அவர்களையே செலவு செய்ய வைப்பான். இப்படி நெருக்கமாக உறவு போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் ஒருநாள் தனக்கு அவசரமாக ஒரு பெருந்தொகை தேவைப்படுவதாக பரபரப்புக் காட்டுவான். அத்தொகை, லட்சங்களில் இருக்கும். அதை தன்னுடன் பழகும் பெண்ணிடமிருந்து வாங்கிக் கொண்டு போகிறவன், திரும்ப மாட்டான்.
சடத்கான் இதை ஒரு தொடர் தொழில் போலவே செய்து வந்திருக்கிறான். ஒரு பெண்ணிடம் அடித்த பணத்தை, அடுத்த பெண்ணைக் கவர்வதற்கான முதலீடாகப் பயன்படுத்தியிருக்கிறான். இத்தனை சாகசங்களும் புரிந்த சடத்கான் ஆட்டோ டிரைவர் என்பதுதான் ஆச்சரியம்.
கர்நாடக மாநிலம் ஹாசன்தான் சடத்கானின் சொந்த ஊர். முஸ்டாக் அகமது- ஷகானாநவாஸ் தம்பதியின் மூன்றாவது மகன். ஐ.டி.ஐ.யில் பயின்ற சடத்கான், தகுந்த வேலை கிடைக்காமல் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வந்திருக்கிறான்.
மொடாக்குடியனான சடத்கானிடம் அவனது பெற்றோர் சொல்லிச் சொல்லிப் பார்த்து, ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் வீட்டை விட்டே துரத்தியிருக்கின்றனர். அப்படி 2011-ல் பெங்களூரு வந்த சடத்கான், அங்கு யெஷ்வந்த்பூரில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் ஓராண்டு காலம் வேலை பார்த் திருக்கிறான். அடுத்த ஆண்டு, கோரமங்களாவில் உள்ள ஒரு கிளப்பில் டெலி காலராக பணியில் சேர்ந்திருக்கிறான். அடுத்தடுத்து இரு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறான்.
பெண்களுடன் நெருங்கிப் பழக விரும்புவதும், அவர்களை ஒரு பொருளைப் போல உபயோகிக்க முயல்வதும் சடத்கானின் வழக்கம். அதனாலேயே அவன் ஒவ்வொரு வேலையில் இருந்தும் தூக்கப்பட்டிருக்கிறான். இந்த மாதிரியான காலகட்டத்தில் சடத்கானுக்குத் தோன்றிய யோசனைதான், பெண்களை வலைவீசிப் பிடிப்பது.
பேஸ்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கிய அவன், திருமண இணைய தளங்களிலும் பதிவு செய்துகொண்டிருக்கிறான். பின்பு தனது வேலையை விறுவிறுப்பாக காட்டதொடங்கிவிட்டான்.
அவனது முக்கியக் குறிக்கோள், தான் குறிவைக்கும் பெண் பணக்காரியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே! இவனது தேன் தடவிய வார்த்தைகளில் பல தரப்பட்ட பெண்களும் சொக்கிப் போய் சிக்கியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் தன்னையும் கொடுத்து, பல லட்சங்களையும் தாரை வார்த் திருக்கிறார்.
சடத்கானிடம் ஏமாந்த பெண்கள், வெளியே சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு அடக்கிவாசித்தது அவனுக்கு வசதியாகப் போனது. அதனால் தடையின்றி அவன் ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரத்தானே வேண்டும்?
‘பிரீத்தம் குமார் என்ற பெயரில் தன்னிடம் நெருங்கிப் பழகிய ஒருவன், தன்னிடம் இருந்து சில லட்சங்களை வாங்கிக்கொண்டு தன்னை திருமணமும் செய்யாமல் ஏமாற்றிவருவதாக’ பாகலூர் போலீசில் ஒரு பெண் புகார் தந்தார். தான் அந்தரங்கமாகப் பழகியதை வெளிப்படுத்த வெட்கப்பட்டுக்கொண்டு, தன்னை அவன் மானபங்கம் செய்துவிட்டதாகப் புகாரில் கூறினார்.
அதன் பேரில் சடத்கானை சல்லடை போட்டுத் தேடிய போலீசார், அவனை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கைது செய்தனர். அவனிடம் துருவத் துருவ, அவன் 75-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அல்வா கொடுத்திருப்பதை அறிந்து அதிர்ந்தனர். ஆனால் இப்போதைக்கு, 8 பெண்களை ஏமாற்றியதாகவே இவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து மட்டும் சடத்கான் சுருட்டிய தொகை, ரூ.45 லட்சம்.
இந்த 8 பெண்களைப் போல, சடத்கானால் ஏமாற்றப்பட்ட மற்ற பெண்களும் முன்வந்து புகார் கொடுக்க வேண்டும் என்பது போலீசின் கோரிக்கை.
உண்மையில், சடத்கான் மைசூரு போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் சில நாட்களைக் கழித்திருக்கிறான். ஜாமீனில் வெளியே வந்தவன், மீண்டும் பழைய ‘தொழிலில்’ இறங்கியிருக்கிறான். இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போலீசார் கூறுகிறார்கள்.

About UK TAMIL NEWS