வடக்கு மற்றும் கிழக்கில் ஏதோ ஒருவகையிலான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களை பார்க்கிலும், தற்போது அந்த மாற்றங்களை உணர முடிவதாகவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாளை நிச்சயமாக இன்னும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இருந்தும் எல்லாம் மாறிவிட்டது என்று கூறமுடியாது.
இந்நிலையில், வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமில்லை. அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே ஏற்றுக்கொண்டுள்ளனர். யதார்த்தமும் அதுதான்.
இலங்கை மதம் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும், இலங்கை அரசியல் அமைப்பு சமஷ்டி அரசியலமைப்பாக வரவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
எனினும், இந்த விடயங்கள் நடக்காது. அதேவே உண்மையும் கூட. அந்த யதார்த்தத்தின் பங்காளியாகவே கூட்டமைப்பு இருந்துகொண்டிருக்கின்றது.
இதனை வைத்துக்கொண்டு கூட்டமைப்பையோ, இரா.சம்பந்தனையோ குறை கூற முடியாது. இந்த விடயம் தொடர்பில் சம்பந்தனும் முழு முயற்சியுடனேயே செயற்பட்டுகொண்டிருக்கின்றார்.
யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலை பலவீனமாக இருக்கின்றது. எனவே, இருப்பதை வாங்கிக்கொண்டு ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.