வெளிநாட்டிலிருக்கும் மகனின் தகவலை கேட்டு யாழில் தந்தையை மிரட்டும் கும்பல்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வெளிநாட்டிலிருக்கும் மகனின் தகவலை கேட்டு யாழில் தந்தையை மிரட்டும் கும்பல்!

யாழ். நவாலி மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த வயோதிபர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதுடன், குறித்த வீட்டாருக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த வீட்டார் யாழ்.மனித உரிமைகள் ஆணைகுழுவில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு 11 மணியளவில் நவாலி மேற்கு மனிப்பாய் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திய போது அங்கிருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த குமாரசாமி நவரட்ணராஜா (வயது 72) என்பவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புலம்பெயர் நாட்டில் வசித்துவரும் அவருடைய மகன் தொடர்பில் தகவல்களை தருமாறும் மிரட்டியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் தொடர்ந்தும் கூக்குரல் எழுப்பியதால் குறித்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் அங்கு வந்த அயலவர்கள் தாக்குதலுக்கு உள்ளான வயோதிபரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு வந்த பொலிஸார் குறித்த வயோதிபர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்கு மூலத்தினை பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த குறித்த வயோதிபர் மீண்டும் வீடு திரும்பிய பின்னர், இரவு வேளைகளில் அவரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் இனந்தெரியாத நபர்கள் நடமாடி வந்துள்ளனர்.
இதனால் குறித்த வயோதிபர் தான் தாக்கப்பட்ட சம்வம் தொடர்பிலும், பொலிஸாரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமை தொடர்பிலும், தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றமை தொடர்பிலும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS