விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் முடியாததை வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டு சாதித்துக்கொள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் வழிகாட்டுதலுக்கு அமையவே, வடமாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள், அப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுகின்றனர்.
வடமாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஆதரவானவர்கள் இந்த நாட்டில் இல்லை. மாறாக புலம்பெயர் நாடுகளிலேயே வாழுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய செயற்படுவதே குறித்த இருவரின் நோக்கமாக இருக்கின்றது.
அத்துடன், வடக்கில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் மாகாண சபை உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ பிரியக்கூடாது என்பது புலம்பெயர் தமிழர்களின் நோக்கம்.
முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அது நடைமுறைக்கு சாத்தியப்படாது என்பது எமக்கு நன்றாக தெரியும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் முடியாததை வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டு இந்த அரசின் காலத்தில் சாதித்துக்கொள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, அந்த நிகழ்ச்சி நிரலுக்கு பாதகம் ஏற்படும் வகையில் செயற்படுவதற்கு யாருக்கும் இடமளிக்க புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் தயாராக இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.