புண்களை ஆற்றும் பண்ணை கீரை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

புண்களை ஆற்றும் பண்ணை கீரை

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பண்ணை கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம். வெண்மை நிற பூக்களை தாங்கி நிற்பது பண்ணை கீரை. இது, புண்களை ஆற்றும் தன்மை உடையது. புரதம், இரும்பு சத்துக்களை உள்ளடக்கியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. காய்ச்சல், வயிற்று வலி, மாதவிலக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது. பண்ணை கீரையை கொண்டு குடலை பலப்படுத்தி இரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, நல்லெண்ணெய், பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், உப்பு. 

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். இதனுடன், நசுக்கி வைத்திருக்கும் பூண்டு, வெங்காயம் மற்றும் பண்ணை கீரை பசை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர், உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும். இதில், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர எலும்புகள், பற்கள் பலப்படும்.  வயிற்று புண்களை ஆற்றி குடலை பலப்படுத்தும். உடலுக்கு பலம் தரும் பண்ணை கீரை ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்யும். பண்ணை கீரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை பூக்கள், சீரகம், பனங்கற்கண்டு. 
செய்முறை: பண்ணை கீரை பூக்கள் 5 முதல் 10 எடுத்து நசுக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர முறையற்ற மற்றும் வலியுடன் கூடிய மாதவிலக்கு, சிறுநீரில் ரத்த கசிவு, சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல், வலி போன்றவை குணமாகிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட பண்ணை கீரை அற்புதமான உணவாகிறது. ரத்தபோக்கு, ரத்தசோகை, மன உளைச்சல், பலகீனம் போன்றவற்றை ஏற்படுத்தும் மாதவிலக்கு பிரச்னைக்கு சிறந்த மருந்தாக பண்ணை கீரை பூக்கள் விளங்குகிறது. இது ரத்தபோக்கை கட்டுப்படுத்த கூடியதாகிறது. வலி, வீக்கத்தை போக்குகிறது. பண்ணை கீரையை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, பூ, வெந்தயம், பனங்கற்கண்டு.

செய்முறை: பண்ணை கீரை, பூக்களை துண்டுகளாக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன், வெந்தயம், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல், ரத்தக் கசிவு, வெள்ளைபோக்கு பிரச்னைகள் குணமாகும். சிறுநீரை தாராளமாக வெளியேற்றும். கண்களில் சிவப்பு தன்மை, கண் எரிச்சல் சரியாகும்.  நோய்களை நீக்கும். பண்ணை கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டுவர நோய்கள் வராமல் தடுக்கப்படும். உடல் நலம் பெறும்.
உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு இளநீர் அற்புதமான மருந்தாகிறது. வழுக்கையான இளநீருடன், கற்கண்டு சேர்த்து நன்றாக கலந்து குடித்தால் அடிவயிற்று வலி உடனடியாக விலகிப்போகும்

About UK TAMIL